ராஜஸ்தான்: குடும்ப சண்டையில் மனைவியை கொல்ல கத்தியுடன் பாய்ந்த நபர் பலி

ராஜஸ்தானில் அண்ணியை கொல்ல கத்தியுடன் பாய்ந்த அண்ணனை பார்த்து, இளைய சகோதரர் ஜீத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ராஜஸ்தான்: குடும்ப சண்டையில் மனைவியை கொல்ல கத்தியுடன் பாய்ந்த நபர் பலி
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பிகானீர் நகரில் கமலா காலனி பகுதியில் வசித்து வந்தவர் சன்னி பன்வார் (வயது 42). இவருடைய மனைவி மம்தா (வயது 40). இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு இதேபோன்று கணவன் மற்றும் மனைவிக்குள் சண்டை மூண்டுள்ளது. இதில், திடீரென சமையலறைக்கு சென்ற சன்னி, கையில் கத்தியுடன் திரும்பி வந்துள்ளார்.

அப்போது, சன்னியின் இளைய சகோதரர் ஜீத்து இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தம்பதியின் சண்டையை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இந்த மோதலின்போது, ஜீத்துவுக்கும், மம்தாவுக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இதில், ஒரு கட்டத்தில் சன்னியின் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. 3 பேரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், படுகாயமடைந்திருந்த சன்னி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். சன்னி, நிலையாக ஒரு வேலையில் இல்லை என கூறப்படுகிறது. பார்சல்களை கொண்டு சென்று கொடுக்கும் பணியில் இருந்த அவர், பின்பு அதனை விட்டு விட்டார். பின்னர் மதுபானம் குடிப்பதும், அடிக்கடி சண்டை போடுவதும் என இருந்துள்ளார்.

அவருடைய மனைவி மம்தாவும், ஜீத்துவும், பி.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com