ரெயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்: பயணிகளுக்கு இனிப்பான செய்தி

சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ரெயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்: பயணிகளுக்கு இனிப்பான செய்தி
Published on

ரெயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு அட்டவணைகளை (Chart list) வெளியிடும் முறையில் புதிய விதிமுறைகளை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் இருக்கை நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்போது வரை ரெயில்கள் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சார்ட் லிஸ்ட் வெளியிடப்படுகிறது.

இதனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா? இல்லையா? என்பது தெரியாமல் திக் திக் மனநிலையுடன் காத்திருப்பார்கள். டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் பட்சத்தில் இறுதி நேரத்தில் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும். இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இத்தகைய சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, காலை 5:01 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் தயாரிக்கப்படும். மதியம் 2:01 மணி முதல் இரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைப்படி சார்ட் லிஸ்ட் வெளியிடுவதற்கு டிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ரெயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS)-த்திற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளதாம். விரைவில் இது இந்த விதிகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா? இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதால் ரெயில்வேயின் இந்த வசதி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com