மராட்டியம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

வேன் டிரைவரின் பெயர் குறித்த விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியரை அழைத்துச்செல்ல வேன் உள்ளது. இந்த வேனின் டிரைவராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் நேற்று மாலை வகுப்பு முடிந்து வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அனைத்து மாணவ, மாணவியரையும் இறக்கிவிட்டப்பின் கடைசியாக இருந்த மாணவிக்கு வேன் டிரைவர் வேனில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வேன் டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேன் டிரைவரின் பெயர் குறித்த விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.






