எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு

தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலலைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 (சமத்துவ உரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் வாழ்க்கை உரிமை), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க.வின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதன்படி தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.






