சொத்தை விற்று பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்ததால் ஆத்திரம்; கணவனை கொன்று புதைத்த 2வது மனைவி

கடந்த சில மாதங்களுக்குமுன் ராம்பாலி மாயமானார்
சொத்தை விற்று பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்ததால் ஆத்திரம்; கணவனை கொன்று புதைத்த 2வது மனைவி
Published on

 ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாலி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் வசித்து வருகிறார். ராம்பாலி ராஞ்சியில் தனது 2வது மனைவி சம்பாவுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்குமுன் ராம்பாலி மாயமானார். அவரை காணவில்லை என்று உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ராம்பாலியை அவரது 2வது மனைவி சம்பா கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சம்பாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கணவர் ராம்பாலியை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக சம்பா கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பாவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

ராம்பால் தனக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விற்று அந்த பணத்தை வாரணாசியில் உள்ள முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சம்பா, ராம்பாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர், தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது உறவினரான விஷ்ணுவுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராம்பாலை கொலை செய்துள்ளனர். கொலை செய்தபின் ராம்பாலின் உடலை புதைத்துள்ளனர். இதையடுத்து, சம்பா, அவரது உறவினர் விஷ்ணு உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் அனைவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், புதைக்கப்பட்ட ராம்பாலின் உடலை தோண்டி எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com