உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணி ஆகியவை கிளப்பிய சூறாவளிகளால் பிரசாந்த் கிஷோர் தூக்கி வீசப்பட்டார்.
உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
Published on

பாட்னா,

பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற பெயரில் புகழ்பெற்றவர். ஆனால் இந்த பணியை விட்டு விட்டு பீகாரில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.

அவரது கட்சி நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் 240 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பீகார் அரசியலின் மையத்தளமாக இருப்பது சாதி அடிப்படையிலான வாக்கு வங்கிகள் தான். ஆனால் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு இத்தகைய அடித்தளம் எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணி ஆகியவை கிளப்பிய சூறாவளிகளால் பிரசாந்த் கிஷோர் தூக்கி வீசப்பட்டார்.

இந்த நிலையில், உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தத் தேர்தலின் முடிவுகள் திறம்பட விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. பீகாரில் தற்போதைய பொதுக்கடன் ரூ.4.06 லட்சம் கோடி. ஒரு நாளைக்கு வட்டி ரூ.63 கோடி. ஆனால் பீகார் கருவூலம் தற்போது காலியாக உள்ளது.

உலக வங்கியில் இருந்து பீகாரின் பல்வேறு திட்டங்களுக்காகப் பெறப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடியில் இருந்துதான் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. 10,000 வழங்கப்பட்டது. தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ. 14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. பீகாரின் பொருளாதாரம் இவ்வளவு பெரிய தொகையை மீட்டெடுக்க முடியாது.

தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பொது நலனுக்காக செலவிட இப்போது எந்தப் பணமும் இல்லை. பொது நிதியைப் பயன்படுத்திதான், அவர்கள் மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். இவையனைத்து எங்கள் தகவல், அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்தால். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com