மாற்றுத்திறனாளி குடும்பம் மீது தாக்குதல்


மாற்றுத்திறனாளி குடும்பம் மீது தாக்குதல்
x

வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி மாற்றுத்திறனாளி குடும்பத்தை தாக்கிய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி மாற்றுத்திறனாளி குடும்பத்தை தாக்கிய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சுரக்குடி சிவசித்ரா காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). மாற்றுத்திறனாளி. இவர் சுரக்குடி சாலையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரூபியா (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு 12 மணியளவில் செல்வம் தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டு வாசலில், கதவு உடைக்கும் சத்தம் கேட்டு ரூபியா திடுக்கிட்டு எழுந்து வாசலுக்கு சென்று பார்த்தார்.

தாக்குதல்

அப்போது எதிர்வீட்டை சேர்ந்த நாகராஜன் (52), அவரது மகன்கள் ஆனந்தசிவபாலன் (25), கிருஷ்ணபாலன் (23), கேசவபாலன் (22) மற்றும் சுரக்குடி கலக்காமேட்டு தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அப்பு (25) ஆகிய 5 பேர் செல்வத்தின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதுபற்றி தட்டிக்கேட்ட ரூபியாவை அவர்கள் தாக்கினர். இதை தடுக்க முயன்ற செல்வம், அவரது மகள்களும் தாக்கப்பட்டனர். உடனே வீட்டை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் அனைவரையும் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

5 பேருக்கு வலைவீச்சு

தாக்குதலில் காயமடைந்த செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜன், அவரது மகன்கள் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story