பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம்


பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம்
x

பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பாகூர்

பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

தேரோட்டம்

பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் இரவில் சாமி வீதியுலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பக்தி கோஷம்

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நிலைநிறுத்தினர்.

இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் தியாகராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பாகூர் பகுதியில் விழா நடத்துவதில் இரு கோஷ்டியாக இருந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தெப்பல் உற்சவம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருகன், வள்ளி-தெய்வானை தெப்பல் உற்சவமும் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) 63 நாயன்மார்களின் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story