கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பா?
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சளி,காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் புதுச்சேரிக்கு கட்டிட வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். இந்தநிலையில கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை உள்நோயாளியாக அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறுகையில்,'புதுவை மாநிலத்தில் இதுவரை யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. கடலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இதுதொடர்பான சோதனை நடந்தது. புனே ஆய்வகத்தில் இருந்து வந்த அறிக்கையில், அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.