கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்


கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்
x

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அம்பகரத்தூர்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கண்தானம் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம், ஓடை வீதி, பெருமாள் கோவில் வீதி, தலையாரி வீதி வழியாக சென்று திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story