எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்


எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
x

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏம்பலம், அரியாங்குப்பம், திருபுவனை தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

புதுச்சேரி

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏம்பலம், அரியாங்குப்பம், திருபுவனை தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

ஏம்பலம்

ஏம்பலம் தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமையில் கொண்டாடப்பட்டது. கிருமாம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி, 1000 பேருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கினார். முன்னதாக தொகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் கல்வி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகை ரூ.83 லட்சம் வழங்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் 70 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் மூலம் 10 பேருக்கு முடி திருத்தும் நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூக நலத்துறை மூலம் 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், என்.ஆர்.காங்கிரஸ் பொருளாளர் வேல்முருகன், முன்னாள் சேர்மன் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

காமராஜர் திருமண நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. மேலும் கலைமாமணி விருது பெற்ற 28 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருபுவனை

திருபுவனை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா தலைமையில் திருவாண்டார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம், சர்க்கரை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தொகுதியில் உள்ள பல்வேறு ஊர்களில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்கள், இளைஞர் அமைப்பினர், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story