அமலாக்க துறையை யாரும் ஏவி விடவில்லை


அமலாக்க துறையை யாரும் ஏவி விடவில்லை
x

அமலாக்கத்துறை தனி அதிகாரம் படைத்த அமைப்பு, அதை யாரும் ஏவி விடவில்லை என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதுச்சேரி

அமலாக்கத்துறை தனி அதிகாரம் படைத்த அமைப்பு, அதை யாரும் ஏவி விடவில்லை என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

பா.ஜ.க. மாநாடு

பா.ஜ.க.வின் பல்வேறு அணிகள், பிரிவுகளின் புதுவை மாநாடு கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்தது. மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகன் வரவேற்றுப் பேசினார்.

மாநாட்டில் கலந்துகொண்டு மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் புதுவை மாநிலத்தில் 16 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகள்தோறும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குடிநீர் வழங்குகிறோம். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் செலுத்தப்படுகிறது. புதுவை மாநிலத்திற்கு இதன்மூலம் 11 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்களுக்கான திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் அவர்களிடம் ரூ.15 மட்டுமே போய் சேருவதாக கூறியிருந்தார். ஆனால் இப்போது ரூ.100-ம் மக்களை வங்கி மூலம் நேரடியாக சென்றடைகிறது.

ரூ.1,500 கோடி சிறப்பு நிதி

காலியாக உள்ள 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க. அமைச்சர் வசம் உள்ள உள்துறையில் 700 போலீசார் எந்த முறைகேடும் இன்றி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.1,500 கோடி கொடுத்துள்ளோம். பிரதமர் கூறியபடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. திருமாவளவன் ஆதிதிராவிட இளைஞர்களை திசை திருப்புவதாக இங்கு பேசியவர்கள் கூறினார்கள். இளைஞர்கள் வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்ப வேண்டும். வருகிற 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாற பாடுபடுவோம்.

இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அங்காளன், சிவசங்கர், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தனி அதிகார அமைப்பு

மத்திய மந்திரி எல்.முருகனிடம் ''தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், அமலாக்கத்துறை ஒரு தனி அதிகாரம் படைத்த அமைப்பு. அப்படி இருக்கும் போது எப்படி இயக்க முடியும். அவர்களை யாரும் ஏவி விடவில்லை. அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் செயல்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.


Next Story