பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து விற்பனை


பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து விற்பனை
x

திருநள்ளாறு அருகே பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டை சேர்ந்தவர் விஜய். இவரது பொக்லைன் எந்திரத்தை சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு விஜய் (வயது 35) என்பவர் கடந்த ஆண்டு வாடகைக்கு எடுத்துச் சென்றார். அதன்பிறகு அவர் பொக்லைன் எந்திரத்துக்கு வாடகை கொடுக்காமல் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொக்லைன் எந்திர உரிமையாளர் விஜய் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விஜயை தேடி வந்தனர்.

இந்நிலையில் வாடகைக்கு எடுத்துச் சென்ற பொக்லைன் எந்திரத்தை விஜய், தனது நண்பர் நாகை மாவட்டம் குறுக்கத்தியைச் சேர்ந்த முகமது பாரூக் (36) என்பவரிடன் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து பொக்லைனை வாடகைக்கு எடுத்துச்சென்று விற்ற விஜய், அதை வாங்கிய பாரூக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story