உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x

மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலக்ட்ரீசியன் பலி

திருநள்ளாறை அடுத்த சுரக்குடியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் விக்னேஸ்வரன் (வயது 30). இவர் நேற்று காரைக்கால்- பேரளம் இடையே ரெயில் பாதையில் கேபிள் புதைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கிரேனுடன் சேர்த்து கேபிள் பண்டல் அறுந்து, கேபிள் புதைக்க தோண்டப்பட்டிருந்த குழிக்குள் நின்றிருந்த விக்னேஸ்வரன் மீது விழுந்து அமுக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஆபரேட்டர் கார்த்திகேயனை கைது செய்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் பணியின்போது இறந்த விக்னேஷ்வரனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சுயேட்சை எம்.எல்.ஏ. சிவா, மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


Next Story