குப்பையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்த போலீஸ்காரர்


குப்பையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்த போலீஸ்காரர்
x

மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை போலீஸ்காரர் ஒருவர் தனி ஆளாக போராடி அணைத்ததால் அருகில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் தப்பின.

முதலியார்பேட்டை

மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை போலீஸ்காரர் ஒருவர் தனி ஆளாக போராடி அணைத்ததால் அருகில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் தப்பின.

தீவைப்பு

முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் வழியாக தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க பிளாஸ்டிக் பைப்புகளும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மர்ம ஆசாமி யாரோ குப்பைக்கு தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. குப்பைகள் எரிந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களுக்கும் தீ பரவ ஆரம்பித்தது.

மண்ணைக்கொட்டி...

அப்போது அந்த வழியாக கடலோர காவல் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சவுந்தரராஜ் வந்தார். அவர் தீ எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். அருகில் கிடந்த மண்ணை தனது கைகளால் அள்ளி இறைத்தும், பனை மட்டையால் அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது இந்த செயலால் பிளாஸ்டிக் குழாய்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

அவர் அவ்வாறு செய்யாதிருந்தால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து சேதம் அடைந்திருக்கும்.

தனி ஒருவராக போலீஸ்காரர் தீயை அணைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story