'ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை'


ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை
x

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை என்று, அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை ராஜினாமா குறித்து பரபரப்பு கடிதம் எழுதி இருக்கிறார்.

புதுச்சேரி

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை என்று, அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை ராஜினாமா குறித்து பரபரப்பு கடிதம் எழுதி இருக்கிறார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரபிரியங்கா, தனது தொகுதியான நெடுங்காடு மக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சூழ்ச்சி அரசியல்

என்னை சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக என் பணியை மனத்திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்தும், பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.

ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்.

விரைவில் பட்டியல்

தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்த பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால் தொடர்ந்து குறி வைக்கப்பட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?

கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன். என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆதிக்க சக்திகள்

ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு எம்.எல்.ஏ.வாக எனது பணியை தொடர்ந்து ஆற்றுவேன்.

எனக்கு இப்பதவியை கொடுத்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இந்த சமூகங்களில் இருந்து வந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

மேடைகளில் முழக்கம்

அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும். மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும், பணத் திமிரினாலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியை கொடுத்து பெரும்பான்மை வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

இறுதியாக பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதே கருத்துடன் கூடிய மற்றொரு கடிதத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.


Next Story