மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டா புதுச்சேரி வருகை


மத்திய மந்திரி அமித்ஷா,  ஜே.பி. நட்டா புதுச்சேரி வருகை
x

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. ஆயத்தமாகி வருகிறது. அதையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற நவம்பர் மாதம் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. ஆயத்தமாகி வருகிறது. அதையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற நவம்பர் மாதம் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

நிர்வாகிகள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அமித்ஷா வருகை

சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள். மேலும் நிர்வாகிகள் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் என்றும் விளக்கினார்கள்.

வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தேர்தலுக்கு ஆயத்தம்

பா.ஜ.க.வின் தேசிய தலைமையானது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலத்தி வருகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

மத்திய மந்திரி எல்.முருகன்

ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக முடங்கிக்கிடந்த இந்த கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.


Next Story