பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை


பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை
x

ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி-

ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வு

புதுவை பொதுப்பணித்துறையில் சுமார் 1,500 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அவர்கள் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்திதர வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே வவுச்சர் ஊழியர்களின் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவித்தார்.

ஆனால் 3 மாதங்கள் ஆன நிலையிலும் சம்பள உயர்வுக்கான கோப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை. இதை கண்டித்து வவுச்சர் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டனர்.

தரையில் அமர்ந்து போராட்டம்

போராட்டத்துக்கு அரசு பணியாளர்கள் நலக்கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் (புஸ்சி வீதி) அவர்கள் திரண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பள உயர்வு தொடர்பாக உடனடியாக கோப்புகளை தயார் செய்வதாக அவர் உறுதியளித்தார். அதனை ஏற்று வவுச்சர் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்நு சென்றனர்.

கோப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தயாராகாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வவுச்சர் ஊழியர்கள் தெரிவித்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களும் சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி இன்று பொதுப்பணித்துறை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story