நான் ரெடிதான் வரவா.. விஜய்க்காக தயார் நிலையில் சொகுசு பேருந்து

அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, விஜய் சுற்றுப்பயணத்திற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சொகுசு பேருந்து ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஓய்வெடுக்க தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.






