

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழ்மேல்குடியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மேனகா (43 வயது). இவர் நேற்று மதியம் காளையார்கோவிலை அடுத்த தவசுகுடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மொபட்டில் சென்றார். சிவகங்கை அருகே உள்ள காட்டுக்குடியிருப்பு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் திடீரென மேனகா ஓட்டி வந்த மொபட்டை இடித்து கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து அவர் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.