புனேயில் இருந்து குமரிக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

புனேயில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.
இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.






