தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த எட்வின்தங்கராஜ் மகன் ஜேம்ஸ்செல்லத்துரை (வயது 25) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






