இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்- தவெக தலைவர் விஜய்

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்
அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவச் சகோதரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






