5 தமிழர்கள் மாலியில் கடத்தல்; உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை

கடத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
5 தமிழர்கள் மாலியில் கடத்தல்; உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை
Published on

சென்னை,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால் பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவி காணப்படுகிறது. அவர்கள் மக்களிடையே வன்முறையை பரப்புவதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்துவதும், மிரட்டி பணம் பறிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கடந்த 6-ந்தேதி கடத்தி சென்றுள்ளது. மேற்கு மாலியின் கோப்ரி பகுதியருகே தனியார் மின் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்தி சென்றனர்.

அவர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். என்ன ஆனார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கையாக, அந்த நிறுவனத்தில் இருந்த மற்ற இந்திய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக பமாகோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

கடத்தப்பட்டவர்கள் 5 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நாறைக்கிணறு பகுதியை சேர்ந்த பி. பொன்னுதுரை (41), கோடியங்குளம் பகுதியை சேர்ந்த எஸ். புதியவன் (52), கலப்பைப்பட்டி பகுதியை சேர்ந்த எம்.பேச்சிமுத்தி (42) மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இசக்கிராஜா (36) மற்றும் தளபதி சுரேஷ் (26) ஆகியோர் ஆவர்.

இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான கனிமொழி எம்.பி., தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று, கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு ஆப்ரிக்கா - மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியை சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுத குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com