தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசார் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசாரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாகவும் பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யுமாறு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் (ஆயுதப்படை பொறுப்பு) மேற்பார்வையில் மோட்டார் வாகன பிரிவு போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமுள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பெண் போலீசாருக்கு 35 நாட்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்தனர்.
மேற்சொன்னபடி ஓட்டுநர் பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட 8 பெண் போலீசார் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றனர். அந்த 8 பெண் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ஓட்டுநர் உரிமம் வழங்கி வாழ்த்து தெரிவித்தும், அவர்கள் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் உடனிருந்தனர்.






