காதலியின் வீடு தேடி வந்த இளைஞருக்கு அடி, உதை - பரபரப்பு சம்பவம்


காதலியின் வீடு தேடி வந்த இளைஞருக்கு அடி, உதை - பரபரப்பு சம்பவம்
x

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சிஜூ (வயது20). இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருவே ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் சுமூகமாக பேசி இளம்பெண்ணின் கல்லூரி படிப்பு முடிந்த பின்பு திருமணம் செய்து கொடுப்பதாக முடிவெடுத்தனர். இந்தநிலையில் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

அதேபோல் இளம்பெண் காதல் திருமணம் செய்வது அவரது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணின் அண்ணன், தனது தங்கையிடம் பேசக்கூடாது என்றும், எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்றும் எச்சரித்தார். அத்துடன் எங்கள் வீட்டின் அருகே வந்து பார் என சவால் விடுத்தார். அப்போது சிஜூ, வருவேன் என சவாலை ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் சிஜூ இளம்பெண்ணின் வீட்டின் அருகே வந்துள்ளார். இதைபார்த்து ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணின் அண்ணன் சிஜூவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சிஜூ அருமனை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story