சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்ற சந்திரன் (27 வயது). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சத்தியதாரா வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜாராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட சந்துரு என்ற சந்திரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், பி.என்.எஸ். சட்டம் பிரிவு 87-ன்படி (கடத்தல்) 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கும்படியும், சிறை தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.






