அதிமுக விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், ”2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டார்” என்று வாதிடப்பட்டது. சூரியமூர்த்தி தரப்பில், ”கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதாவது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்ற கோர்ட்டு, சூரிய மூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.






