ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜரான நிலையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
Published on

சென்னை,

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் ஏன் ஆஜராகவில்லை எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ஆஜராவதில் இருந்து விலக்கு உள்ளதாக கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இருவரும் நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கூறி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர். இதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் ஆஜரான அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com