அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தடுத்து நிறுத்த வேண்டும் -திருமாவளவன்

பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழகத்திலும் மேற்கொள்ளப்படுவதற்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு அனைத்து கட்சி களும் கூடி விவாதிக்க வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை நடைமுறைபடுத்த கூடாது.
பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும். இதற்காக தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும். பல்கலைக்கழக சிறப்பு மசோதாவை திரும்ப பெறவேண்டும் என வி.சி.க. சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இது குறித்து உயர் கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் மறுசீராய்வு செய்யப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.பா.ஜனதாவில் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அரசியல் செய்ய களமின்றி போனதால் விரக்தியில் உள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அவதூறாக பேசுகிறார். எப்படி பிரசாரம் செய்தாலும் பா.ஜனதா தலைமைக்கு இனிமேல் அவர் மீது நம்பிக்கை ஏற்படாது’ இவ்வாறு அவர் கூறினார்.






