அமித்ஷா இன்று நெல்லை வருகை: தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை


அமித்ஷா இன்று நெல்லை வருகை: தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 22 Aug 2025 3:43 AM IST (Updated: 22 Aug 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார்.

அவர், கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார்.அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றுகிறார். அங்கு பா.ஜனதா தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பா.ஜனதா ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச உள்ளார். மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு நடைபெறும் பகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

1 More update

Next Story