கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

கோப்புப்படம்
புத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கீழ் புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் நேற்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் மேற்படி கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின்போது சகடையிலிருந்த குடை மின்கம்பியில் பட்டு அறுந்து கீழே விழுந்ததில் எதிர்பாராதவிதமாக கரகம் தூக்கிச் சென்ற மேற்குறிப்பிட்ட செந்தில்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






