தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு முக்கிய அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்கள் முதல்-அமைச்சர் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் வீடு, டிஜிபி அலுவலகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகங்கள், அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என பரந்த அளவில் அதிகரித்து வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் பரவலான அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனைகள் முடிவில் அனைத்தும் ‘புரளி’ எனத் தெரிந்தாலும், தமிழக காவல்துறையில் நவீன தொலைதொடர்பு கண்காணிப்பு, வலுவான சைபர் கிரைம் அமைப்புகள் உள்ளிட்டவை இருந்தும் விஷமிகளின் இந்தச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
இந்த மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் சர்வ சாதாரணமாக விடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட இத்தகைய மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த சில வாரங்களில் இவை கணிசமாக அதிகரித்துள்ளன. இத்தகைய தொடர் மிரட்டல்களால் மக்கள் அச்சத்தில் உழல்கின்றனர். புரளியாகத் தெரிந்தாலும், ஒரு மிரட்டல் உண்மையாக இருந்தால் அது பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும்.
ஆகவே, இத்தகைய தொடர் மிரட்டல்கள் தமிழகத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த மிரட்டல்களை மேற்கொள்ளும் விஷமிகளைக் கண்டறிய காவல்துறை இதை சவாலாக எடுத்துக்கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி, சிறப்புக் குழுவை அமைத்து, பாதுகாப்பை உறுதி செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






