சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தவெகவினர் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டத்தின்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பிகளை தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
சென்னை,
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது, ரோடு ஷோ நடத்தக்கூடாது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போலீசாரின் கட்டுபாடுகளுக்குட்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆனால் ஆர்ப்பாட்டத்தின்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பிகளை தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், தடுப்பு கம்பிகளை தங்கள் செலவில் சரி செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டம் நடத்திய தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை நடுவே இருந்த தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் சேதப்படுத்திய சம்பவத்தில், "பொது சொத்தை சேதப்படுத்துதல்" என்ற பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






