நெல்லையில் 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் பொருநை அருங்காட்சியகத்தை நேற்று முதல்-அமைச்சர் திறந்த வைத்தார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு சென்றார்.
அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்தித்தார்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்தார்.
இந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார். அங்கு அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனிடையே, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.






