உலக மகளிர் உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2 நாட்கள் நடக்கும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெற உள்ளன.
சென்னை,
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் மற்றும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில், இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 28-ந் தேதி (நாளை) ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடக்கும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், இதில் 70-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேச இருக்கின்றார்கள். உலக மகளிர் உச்சி மாநாட்டில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குனர் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான காந்தா சிங், யு.என்.டி.பி. இந்தியப் பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மொரிஷியசின் தலைமை கொறடா நவீனா ரம்யாத், உள்பட 500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக இதுதொடர்பாக இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஜன. 27, 28) நடைபெறுகிறது. மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குநர் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி காந்தா சிங், ஒருங்கிணைந்த நாடுகளின் வளர்ச்சி இயக்க (யுஎன்டிபி) இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மோரீஷஸ் தலைமை கொறடா நவீனா ரம்யாத், தொழில் துறை, கல்வித் துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட (சிஎஸ்ஆர்) பங்காளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இரு நாள்களிலும் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், இதில் 70-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேசவுள்ளனர். நிறைவு விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நிறைவு விழாவில், பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரசாரம் தொடங்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






