குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை

தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஏலூர்பட்டி சாலையோர பகுதியில் உள்ள வீட்டில் வசிப்பவர் சபிதா (வயது 27). இவர் நேற்று இரவு தனது மகன்கள் பிரஜீத் (8), ரஞ்சித்(5), ஒன்றரை வயது பெண் குழந்தை ரக்சிதா ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், சபிதாவின் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்துள்ளார்.

இதைக்கண்ட சபிதா, அவர் யார்? என்று கேட்டபோது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரக்சிதாவின் கழுத்தில் வைத்து குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி, நகைகளை கழற்றி கொடுக்குமாறும், வீட்டில் உள்ள நகை-பணத்தை எடுத்து வருமாறும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சபிதா தான் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, மோதிரம் என 3 பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் வீட்டில் வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர், சத்தம் போடக்கூடாது என்று மிரட்டிவிட்டு வெளியே வந்த தனது வாகனத்தில் தப்பிச்சென்றார்.

இதையடுத்து சபிதா சத்தம்போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இது குறித்த தகவலின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், முசிறி துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில், சம்பவம் நடந்தபோது சபிதாவின் கணவர் வீட்டில் இல்லை என்பதும், அவர் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழில் செய்து வருவரும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com