தீபாவளி கொண்டாட்டம்: களைகட்டிய சென்னை மெரினா கடற்கரை

சென்னையில் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டன.
சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து, இனிப்பு, பலகார வகைகளை அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து, கோவில்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.
இதனிடையே, சென்னையில் வேலை செய்து வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளியை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன்படி சுமார் 18 லட்சம் பேர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டன. அதே சமயம், சென்னையை சேர்ந்த மக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று நேரம் செலவிட்டனர்.
அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று அதிக அளவிலான மக்கள் குவிந்தனர். சென்னையில் இன்று பகல் நேரத்தில் பரவலான மழை பெய்து வந்த நிலையில், மாலை நேரத்திற்கு மேல் அதிகமான மக்கள் கூட்டம் குவிந்ததால் மெரினா கடற்கரை களைகட்டியது. சென்னையை சேர்ந்த மக்களும், பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட முடியாத மக்களும் கடற்கரையில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.






