வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் ஆணையம் கைவிட கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி சென்னை தங்கசாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.






