திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சேவூர் ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது , பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம். என தெரிவித்துள்ளார் .






