அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இன்று முதல் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) விவாதம் நடக்கிறது.
இந்த நிலையில், சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தீர்மான விவாதத்தின்போது எவ்வாறு செய்லபட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோனையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.






