சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு: மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான்தெருவை சேர்ந்தவர் அல்தாப். அவரது மகன் நவ்பில் (வயது 17). இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு டியூசன் முடித்துவிட்டு நவ்பில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியே சாலையில் தேங்கியிருந்த மழைநீரில், சேதமடைந்த மின்ஒயர் பட்டதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத நவ்பில் நீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதைத்தொடர்ந்து திருவொற்றியூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மின்வாரியம் அலட்சியமாக செயல்பட்டதால்12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.






