தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்:  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

சென்னை,

“தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது. செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்” என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது. சமூகநீதி பேசும் தி.மு.க. அரசு செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதற்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

தமிழக மருத்துவத்துறையில் பத்தாண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை செயல்படுத்த வேண்டிய அரசு, அதற்கு பதிலாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தான் சுப்ரீம் கோர்ட்டு இந்த கருத்தினை தெரிவித்துள்ளது.

செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது முற்றிலும் சரியானது. 2015-ம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்கு பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.

நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியை தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாக கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் தி.மு.க. அரசு மறுத்து வந்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க ஐகோர்ட்டு ஆணையிட்டது. ஆனால், அதனை கூட செய்ய தி.மு.க. அரசு மறுக்கிறது.

சமூகநீதி சமூகநீதி என்று பேசும் தி.மு.க. அரசு, செயல்பாட்டில் அதனை கடைப்பிடிப்பதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 33,987 பேருக்கு மருத்துவ துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சர் கூறி வருகிறார். ஆனால், அவர்களில் 6,977 பேர் மட்டும் தான் மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 27 ஆயிரம் பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆவர். இதுவா சமூகநீதி?

செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக்கொண்டு அவர்களை பணி நிலைப்பு அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூகநீதி என்பதற்கான பொருள் தி.மு.க. அரசுக்கு தெரியாது என்பதால் தான் அதனை செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது. இப்போதாவது தமது உழைப்பு சுரண்டலையும், சமூக அநீதியையும் ஒப்புக்கொண்டு, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

1 More update

Next Story