ஈரோடு: ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஈரோடு: ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 91 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கடம்பூரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களத்துடன் கூடிய ஏல மையம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், தாமரைப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 லட்சம் ரூபாய் செலவில் ஓமியோபதி பிரிவுக் கட்டடம், சத்தியமங்கலம் நகராட்சியில் 75 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்;

நெடுஞ்சாலைத் துறை சார்பில், சத்தி-அத்தாணி-பவானி சாலை முதல் தாசரிபாளையம் சாலை வரையில் 7 கோடி ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 7 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கும்மக்காளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1 கோடியே 64 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், குடிநீர் வசதிகள், மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 12 வகுப்பறைக் கட்டடங்கள், கருமாண்டிசெல்லிபாளையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டடம்;

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் 61 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட கருணை இல்லம் உள்ளிட்ட மொத்தம், 235 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நசியனூர் பேரூராட்சியில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகள், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார துணை நிலையம், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொங்கம்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துதல், செம்பாம்பாளையத்தில் கல்வெட்டுப்பாலம் அமைக்கும் பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல்;

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், மரூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள்;

நீர்வளத் துறை சார்பில், எண்ணமங்கலத்தில் வழுக்குபாறைபள்ளம் ஓடையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள்,

குண்டேரிப்பள்ளம் அணையின் கால்வாய் கதவுகள் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட மொத்தம், 91 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1,566 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவித்தொகை, காதொலிக் கருவி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிரெய்லி கைக்கடிகாரங்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் போன்ற பல்வேறு உதவிகள்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 பயனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 625 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் முதல்-அமைச்சரின் வீடுகள் கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள்; தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 7020 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி மற்றும் அடையாள அட்டைகள் வழங்குதல்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 449 பயனாளிகளுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 10,100 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு, பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்கிட மானியம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமடச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரணத்திற்கான நிவாரண நிதியுதவி, நலவாரிய பதிவு அடையாள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

1 More update

Next Story