பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... குழந்தை பிறந்ததால் குட்டு அம்பலமானது

கேரள மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் குழந்தையை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 45 வயதுடைய தேங்காய் வியாபாரிக்கு மனைவியும், 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி குழந்தை பிறந்தது.
18 வயது பூர்த்தியடையாத சிறுமி குழந்தை பெற்றெடுத்ததையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது சிறுமியுடன் அவரது தந்தை மட்டும் தங்கி இருந்தார். மேலும் சிறுமி பெற்றெடுத்த குழந்தை தந்தையின் உதவியுடன் கேரள மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் கொடுத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, தனது கர்ப்பத்திற்கு காரணம் காதலன் என்று கூறியபடி இருந்தார். ஆனால் காதலன் பெயரை கூற மறுத்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்து கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தந்தை என்பது தெரிய வந்தது. வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது தந்தை அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த தந்தை மனைவி மற்றும் மகனுக்கு தெரியாமல் மகளை திருவனந்தபுரம் அழைத்து சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா தொட்டில் திட்டத்தில் கொடுத்துள்ளார்.
ஆனால் தந்தை மீது உள்ள பாசத்தால் சிறுமி அவரைக் காட்டி கொடுக்காமல் காதலன் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்று கூறி வந்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையை தொடர்ந்து சிறுமி தனது தந்தையே காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தையை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






