இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர்


இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர்
x

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர்.

நாகை,

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இருந்து கடந்த 2-11-2025 அன்று பாலமுருகன்(வயது 30), தினேஷ்(18), குணசேகரன்(42), ராமு(22) ஆகிய 4 மீனவர்களும் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக எல்லை தாண்டி சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே 4 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி முகாமில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் 53 நாட்கள் சிறை வைக்கப்பட்ட 4 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அபராதத் தொகை செலுத்தப்பட்டது.

இதையடுத்து 4 மீனவர்களும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து வந்து இந்திய கடலோர காவல் குழுமத்திடம் எல்லை பகுதியில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து வரப்பட்டு அவர்கள் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தனர். தமிழகம் வந்த 4 மீனவர்களையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறையினர், கியூ போலீசார் விசாரணை நடத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story