பாக்ஸ்கான் முதலீடு: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
சென்னை,
அன்புமணி ராமதாசின் குற்றச்சாட்டு:-
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று பால்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டும் தான் என்று இல்லை. தொழில் முதலீடுகள் குறித்த திமுக அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய் மூட்டைகள் தான் என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு நல்லது நடக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தினால் அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்.
இன்றைய உலக அரசியல் சூழலில் ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவது எவ்வளவு கடினம் ! அதிலுள்ள புவிசார் அரசியல் பிரச்சினைகள் (Geopolitical issues) என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
நேற்று பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள். பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித ஒப்பந்த செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உற்திசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல், அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






