நாளை பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு: அண்ணா தொழிற்சங்க பேரவை புறக்கணிப்பு

அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (புதன்கிழமை) பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய அரசு வங்கிகள், தொலைதொடர்பு, ரெயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில். அ.தி.மு.க.வின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் சு.கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்துப்பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவர், அனைத்து மாநில அண்ணா தொழிற்சங்க தலைவர், அனைத்து இணைப்பு சங்க செயலாளர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் 42 தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, மத்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய அளவில் 9.7.2025 அன்று பொது வேலை நிறுத்தம் செய்வதாக, தமிழகத்தை சேர்ந்த தி.மு.க.வின் தொ.மு.ச (டு.ஞ.கு) மற்றும் ஊஐகூரு அதன் கூட்டமைப்பில் உள்ள 13 சங்கங்கள் கலந்து கொண்டு பொது வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் இந்த தொழிற் சங்கங்கள், தமிழக அரசு பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கு தாங்கள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை, நிறை வேற்றாமல், தொழிலாளர்களை நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருவதற்கு எந்தவித நடவடிக்கையை எடுத்தது? எந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்தது?
ஏதோ தமிழக அரசு தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விட்டது போல, மத்திய அரசை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்வது, வெறும் கண்துடைப்பு என்பதை சுட்டிக்காட்டி. அண்ணா தொழிற்சங்கப் பேரவை இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை (ஜூலை 09) அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.






