சாலை விபத்தில் உயிரிழந்த காதலி... துக்கத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

நரேன் கார்த்திக்கின் காதலி கடந்த 21-ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் நரேன் கார்த்திக் (20 வயது). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் ராஜகுமாரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். நரேன் கார்த்திக்கும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது காதலி கடந்த 21-ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நரேன் கார்த்திக் கோவையில் இருந்து ஊருக்கு புறப்பட்டு வந்தார். தனது காதலி இறந்த துக்கத்தில் இருந்து வந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






