தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் (21.10.2025) விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்த ஆண்டு 20-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21-ந்தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






